Latest News
Monday, March 30, 2026

போர் எதிரொலி: `மீண்டும் மண்ணெண்ணெய்.!' - மத்திய அரசு அறிவிப்பு!

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் இடையே தொடர்ந்துவரும் போரால், ஹோர்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருக்கிறது. ஈரான் அனுமதிக்கும் நாடுகளின் கப்பல் மட்டுமே பயணிக்க முடியும் என்ற சூழல் நிலவுவதால் உலக நாடுகள் பலவும் எரிசக்திப் பற்றாக்குறையை எதிர்கொண்டுவருகின்றன. இந்த நிலையில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் உரிம விதிமுறைகளைத் தளர்த்தி மார்ச் 29 அன்று புதிய அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மண்ணெண்ணெய்
மண்ணெண்ணெய்

அதில், ``மண்ணெண்ணெய் விநியோகம் ஏற்கனவே படிப்படியாக நிறுத்தப்பட்டிருந்த டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பொது விநியோக அமைப்பின் (PDS) உயர்தர மண்ணெண்ணெயை ஒதுக்கீடு செய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், விநியோகத்தை விரைவுபடுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, சமையல் மற்றும் விளக்கு எரிப்பதற்காக, வீடுகளுக்குத் தேவையான மண்ணெண்ணெயை அடுத்த 60 நாள்களுக்கு வழங்கப்படும்.

மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இது தவிர குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்கள் மூலமாகவும் விநியோகிக்கலாம். அவற்றில் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெயை இருப்பு வைக்க அனுமதிக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சம் இரண்டு சேவை நிலையங்களை மாநில அரசுகள் அடையாளம் காணும்.

திருச்சியில் பிரதமர் மோடி
திருச்சியில் பிரதமர் மோடி

தற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலிய விதிகள் 2002-ன் கீழ் மண்ணெண்ணெய் கையாளுதல் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான உரிமத் தேவைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், இறுதிக்கட்ட விநியோகச் சங்கிலியை பலப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தளர்வுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 60 நாட்களுக்கு அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும்." என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: போர் எதிரொலி: `மீண்டும் மண்ணெண்ணெய்.!' - மத்திய அரசு அறிவிப்பு! Rating: 5 Reviewed By: gg