Latest News
Tuesday, April 7, 2026

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா? - 'கோம் நகரில் தீவிர சிகிச்சை?' - உளவுத்துறை தகவல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் மூத்த உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அதே தாக்குதலில் அவர் மகன் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்ததாக ஈரான் ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தது. மார்ச் மாதத் தொடக்கத்தில் தன்னுடைய தந்தையின் வாரிசாக மொஜ்தபா தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், போர் தொடங்கியதிலிருந்து அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.

மொஜ்தபா கமேனி
மொஜ்தபா கமேனி

இந்த நிலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் பகிர்ந்துள்ள ராஜதந்திரக் குறிப்பின்படி, 56 வயதான மொஜ்தபா கமேனி, டெஹ்ரானுக்கு தெற்கே உள்ள கோம் நகரில் ரகசியமாகச் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆழ்மயக்க நிலையில் இருப்பதாகவும், அவருக்கு முகத்தில் காயங்கள் மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் தற்போது சுயநினைவற்ற நிலையில் (Coma) இருப்பதாகவும், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில் அவர் இல்லை என்றும் ‘தி டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மொஜ்தபா கமேனி ஆரோக்கியமாக இருப்பதாகக் காட்டுவதற்காக, அவர் இஸ்ரேலின் அணுமின் நிலைய வரைபடத்தை ஆய்வு செய்வது போன்ற ஒரு காணொளியை ஈரான் அரசுத் தொலைக்காட்சி திங்களன்று வெளியிட்டது. ஆனால், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ‘டீப் ஃபேக்’ (Deepfake) வீடியோ என இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கொல்லப்பட்ட அலி கமேனியின் உடலை நல்லடக்கம் செய்யக் கோம் நகரில் பிரமாண்ட நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் கட்டப்படுவதால், கவலைக்கிடமாக உள்ள மொஜ்தபா கமேனியும் அங்கேயே நல்லடக்கம் செய்யப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. ஆனால், ஈரான் தரப்பில் இதுவரை எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா? - 'கோம் நகரில் தீவிர சிகிச்சை?' - உளவுத்துறை தகவல்! Rating: 5 Reviewed By: gg