'நமக்கு வேண்டியபோது உதவவில்லை; இனியும் தேவை வந்தால் உதவமாட்டார்கள்' என்று ஈரான் போரில் அமெரிக்காவிற்கு நேட்டோ உதவாததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இதனால், நேட்டோவில் இருந்து விலகும் பிளானிலும் இருக்கிறார்.
இந்த நேரத்தில் நேட்டோ நாடுகளுக்கு ஐடியா ஒன்றைப் பரிந்துரைக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
"நேட்டோவில் இருந்து விலகுவதாக அமெரிக்கா உண்மையில் நினைத்தால், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்தே இருக்கும். ஆனால், இப்போதிருக்கும் நிலையில் இல்லை.
இப்போதைய சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பல நாடுகள் தேவை என்று நினைக்கிறேன்.
அவை ஐக்கிய ராஜ்ஜியம், உக்ரைன், துருக்கி மற்றும் நார்வே - ஐரோப்பிய நாடுகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த நான்கு நாடுகள்.
ஐக்கிய ராஜ்ஜியம், உக்ரைன் மற்றும் துருக்கியின் ராணுவங்களை ஒன்றாக சேர்த்தால், அது ரஷ்யாவின் ராணுவத்தைவிட வலுவாக இருக்கும்.
2030-ற்குள்...
உக்ரைன் மற்றும் துருக்கி இல்லாமல், ஐரோப்பிய நாடுகளால் ரஷ்யாவை ஈடு செய்ய முடியாது.
இந்த நான்கு நாடுகளைச் சேர்ப்பதன் மூலம், பாதுகாப்பான வானம் மற்றும் பெரிய ராணுவப் படையைப் பெறலாம்.
ரஷ்யா 2030-ம் ஆண்டிற்குள் ராணுவத்தில் 2.5 மில்லியன் மக்களைச் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அப்போது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பையும், அதன் சார்பின்மையையும் யோசிக்க வேண்டும்.

முதலில் பாதுகாப்பு தான்
ஐக்கிய ராஜ்ஜியம் ஒரு காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதியாகத் தான் இருந்தது.
துருக்கியைப் பற்றி யோசிக்கவேண்டும் என்கிற போது விவசாயம் குறித்த சில பிரச்னைகள் உண்டு.
ஆனால், சிறந்த பொருளாதாரம் இருக்கும்போது, அனைத்தையும் சமாளிக்கலாம்.
ஆனால், பாதுகாப்பு என்று வரும்போது, அதுதான் முதலில். பின்னர்தான் பொருளாதாரம்" என்று கூறுகிறார்.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதற்குக் காரணமே, நேட்டோவில் உக்ரைன் இணைவதாக எடுத்த முடிவு தான். போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்திவருகிறது.
இந்த நிலையில், ஜெலன்ஸ்கி மீண்டும் நேட்டோவில் இணைவதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

0 comments:
Post a Comment