சீனாவில் லஞ்சம் பெற்ற முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது, அந்த நாட்டு நீதிமன்றம்.
நான்ஜிங் நகரின் பொருளாதார மேம்பாட்டு மண்டலத்தின் முன்னாள் துணை இயக்குநர் யாங் யூலின்.
இவர் 1993-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து மொத்தம் 2.21 பில்லியன் யுவான் (கிட்டத்தட்ட 325 மில்லியன் டாலர்) லஞ்சமாகப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

லஞ்சம் பெற்றது மட்டுமல்லாமல், அரசு நிதியில் முறைகேடு செய்தது, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றங்கள் மிகவும் தீவிரமானவை என்றும், நாட்டுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சீனாவில் பொருளாதார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது அரிதான ஒன்றாக இருந்தாலும், அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நடைபெற்று வரும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், அண்மைக் காலங்களில் பல உயரதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 105-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய ஜி ஜின்பிங், "கட்சியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அனைத்து ஊழல் வைரஸ்களையும் முற்றிலுமாக அகற்றுவோம்" என்று உறுதியளித்திருந்தார்.
இந்தச் சூழலில் யாங் யூலினுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஊழலுக்கு எதிரான சீன அரசின் கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment