Latest News
Monday, August 17, 2026

ஒரு அமெரிக்க வீரரை பிடித்தாலோ, கொன்றாலோ 30,000 டாலர் பரிசு; பெண்களுக்கு இரட்டிப்பு.! ஈரானின் அதிரடி

“அமெரிக்க வீரரைப் பிடித்தாலும், கொன்றாலும் பரிசு...” — ஈரான் ராணுவத்தின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே பதற்றத்தில் இருக்கும் அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது.

அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரைக் கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து ஈரான் வசம் ஒப்படைத்தாலோ 30,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என ஈரான் ராணுவத் தளபதி அமீர் ஹடாமி அறிவித்திருக்கிறார். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.28 லட்சம். அதிலும், இந்தச் செயலைச் செய்யும் ஈரானியப் பெண்ணுக்கு வழங்கப்படும் பரிசு இரட்டிப்பாக 60,000 அமெரிக்க டாலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ வெளியிட்ட தகவலின் அடிப்படையில் சர்வதேச ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

“அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரைக் கொன்றாலோ அல்லது பிடித்து ஒப்படைத்தாலோ, 30,000 அமெரிக்க டாலர்கள் அல்லது 5 பில்லியன் ஈரானிய டோமான்கள் பரிசாக வழங்கப்படும்” என அமீர் ஹடாமி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற நடவடிக்கையில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் எனக் கோரி ஏராளமான கோரிக்கைகள் வந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமெரிக்கப் படைகள் ஈரான் மண்ணில் தரைப்படையாக நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல் இல்லாத நிலையில், இந்த அறிவிப்பு எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்பது குறித்த விவரங்களை ஹடாமி தெரிவிக்கவில்லை.

பெண்களுக்கு ஏன் இரட்டிப்பு?

இந்த அறிவிப்பில் கவனம் ஈர்க்கும் மற்றொரு விஷயம், பெண்களுக்கான கூடுதல் பரிசு.

“இந்தச் செயலை மேற்கொள்ளும் துணிச்சலான ஈரானியப் பெண்களுக்கு இரட்டிப்பு பரிசு வழங்கப்படும்” என ஹடாமி அறிவித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, ஆண்களுக்கு 30,000 அமெரிக்க டாலர்கள் என்றால், பெண்களுக்கு 60,000 அமெரிக்க டாலர்கள். பெண்களுக்கு மட்டும் ஏன் இரட்டிப்பு பரிசு என்பது குறித்து ஈரான் தரப்பில் விரிவான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

கொன்றவருக்கு பணம் மட்டுமல்ல... ஆயுதத்துக்கும் பரிசு!

இதோடு இந்த அறிவிப்பு முடிந்துவிடவில்லை.

அமெரிக்க வீரரை கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அதன் உரிமையாளரிடமிருந்து இரட்டிப்பு விலைக்கு வாங்கப்படும் என்றும், அதற்குப் பதிலாக புதிய ஆயுதம் வழங்கப்படும் என்றும் ஹடாமி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், அந்த ஆயுதம் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்றும் அவர் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“அமெரிக்காவுக்கு இனி இங்கு இடமில்லை!”

அமெரிக்காவின் ராணுவ வலிமை குறித்த அந்நாட்டின் கூற்றுகள், ஈரானுடனான போரில் வெளிப்பட்டுவிட்டதாகவும் ஹடாமி விமர்சித்துள்ளார்.

மேலும், அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்ற ஈரானின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதிகளுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைய இனி அனுமதிக்கப்படாது என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனரா?

இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கும் சூழலில், போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையும் கவனம் பெறுகிறது.

ஜூலை 22-ம் தேதி அமெரிக்க தரப்பின் கணக்கில், ஈரான் போருடன் தொடர்புடைய சம்பவங்களில் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு, பென்டகனின் உயிரிழப்பு தரவுத்தளத்தில் எண்ணிக்கை 14 ஆகக் காட்டப்பட்டது. இதனால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், பின்னர் வெளியான தகவல்கள், போரின் வெவ்வேறு கட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை தனித்தனியாக வகைப்படுத்தியதன் காரணமாகவே இந்த எண்ணிக்கை மாறியதாகக் கூறின. குறிப்பாக, ஜூலை 7-க்குப் பிறகு நடைபெற்ற நடவடிக்கைகளுக்கான உயிரிழப்புகள் “வெளிநாட்டு நடவடிக்கைகள்” என்ற தனிப் பிரிவில் வகைப்படுத்தப்பட்டன.

அதனால், 18-ல் இருந்து 14 ஆக அமெரிக்க வீரர்களின் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல. உயிரிழப்புகளை பென்டகன் வகைப்படுத்திய விதத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்த எண்ணிக்கை வேறுபாட்டுக்குக் காரணம்.

மேலும், இந்த மோதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் அனைவரும் ஈரான் மண்ணிலேயே உயிரிழந்தவர்கள் அல்ல. ஜோர்டான், ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு பகுதிகளில் நடந்த சம்பவங்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கெனவே இருந்த பதற்றம்... இப்போது மேலும் அதிகரிப்பு!

அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதலுக்கு இடையே, இரு நாடுகளும் ஜூன் 17-ம் தேதி “இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்” கையெழுத்திட்டிருந்தன.

அதில் தற்காலிக போர் நிறுத்தம், இறுதி ஒப்பந்தத்தை நோக்கிய பேச்சுவார்த்தைகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இறுதி ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை அதிகபட்சம் 60 நாள்களுக்குள் முன்னெடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஒப்பந்தம், தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வீரரை கொன்றாலோ அல்லது பிடித்து ஒப்படைத்தாலோ பணப் பரிசு வழங்கப்படும் என்ற ஈரான் ராணுவத் தளபதியின் அறிவிப்பு, ஏற்கெனவே கொதித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா–ஈரான் உறவில் மற்றொரு அதிர்ச்சி அத்தியாயமாக மாறியிருக்கிறது.

Next
This is the most recent post.
Older Post
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஒரு அமெரிக்க வீரரை பிடித்தாலோ, கொன்றாலோ 30,000 டாலர் பரிசு; பெண்களுக்கு இரட்டிப்பு.! ஈரானின் அதிரடி Rating: 5 Reviewed By: gg