Latest News
Friday, August 28, 2026

Nepal: `நேபாளத்துக்கு மீண்டும் 72 மணி நேரத்தில் ஆபத்து' - சீனா எச்சரிக்கை | முழு விவரம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், அங்கு மற்றொரு இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.

நேபாளத்தில் உள்ள சோசென் கோலா, புரேபு சாங்போ ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில், இந்த வெள்ளத்தால் உருவாகியுள்ள ஒரு பெரிய இயற்கை தடுப்பு ஏரி, அடுத்த 72 மணி நேரத்திற்குள் உடையக்கூடும் என்று சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சீனாவின் நீர் வள அமைச்சகம் வெளியிட்ட இந்த எச்சரிக்கை செய்தியை 'சீனா சென்ட்ரல் டெலிவிஷன்' ஒளிபரப்பியுள்ளது.

நேபாள் வெள்ளம்
நேபாள் வெள்ளம்

அந்தச் செய்தியின்படி, `ஏரியில் ஏற்கனவே 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கி, அது தற்போதே நிரம்பி வழியத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று நாள்களில் கூடுதலாக 30 லட்சம் கன மீட்டர் நீர் அந்த ஏரிக்குள் வரக்கூடும் என்பதால், இந்த இயற்கை தடுப்பணை உடைந்து பேராபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சீன நீர் வள அமைச்சகம் அந்த இடத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

வெள்ள பாதிப்பு குறித்த உருவகப்படுத்துதல்கள் மற்றும் மதிப்பீடுகளைச் செய்து வரும் அதிகாரிகள், ஏரி உடைந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும், அவசர மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்' எனக் குறிப்பிட்டிருக்கிறது.

முன்னதாக, சீனா-நேபாள எல்லையில் நேபாளப் பகுதியில் இருந்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக, தென்மேற்கு சீனாவின் சீசாங் (திபெத்) தன்னாட்சிப் பகுதியில் உள்ள Gyirong பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தற்போது அப்பகுதியில் சீன அதிகாரிகள் பெரிய அளவிலான நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இந்தப் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேபாள் வெள்ளம்
நேபாள் வெள்ளம்

Gyirong பகுதியில் மீட்புப் பணிகளுக்காக சீன ராணுவம், பொறியியல் பிரிவுகள், தொலைத்தொடர்பு அமைப்புகள் மற்றும் தன்னார்வ நிவாரண நிறுவனங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

மோசமான நிலப்பரப்பு, தொடர் மழை மற்றும் அடுத்தடுத்து ஏற்படும் பேரிடர்களுக்கு நடுவே, மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன உபகரணங்களுடன் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 260 வெளிநாட்டவர்கள் உட்பட 558 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Nepal: `நேபாளத்துக்கு மீண்டும் 72 மணி நேரத்தில் ஆபத்து' - சீனா எச்சரிக்கை | முழு விவரம் Rating: 5 Reviewed By: gg