இப்போதெல்லாம் படம் தியேட்டருக்கு வந்த முதல் நாளே இணையதளங்களில் வருவது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் புதிய டொமைனை வாங்கி அதன் மூலம் சிலர் திருட்டுத்தனமாக படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இவை பெரும்பாலும் தியேட்டர்களில் சுடப்பட்டவையாக இருக்கும்.
24, தெறி, மருது, உள்ளிட்ட சமீபத்திய படங்கள் அனைத்தும் இணையதளங்களில் வந்து தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வரிசையில் இது நம்ம ஆளு படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த நிலையில் சிலர் அதனை இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக‘இது நம்ம ஆளு’ திரைப்பட தயாரிப்பாளர் விஜய. டி.ராஜேந்தர் சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் இணைய தளங்களில் வெளியிடப் பட்டிருப்பதாக கூறி அதை உடனடியாக தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் தனது புகார் குறித்து காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருப்பதாக கூறினார்.


0 comments:
Post a Comment